ஹைதராபாத்: கொள்ளளவின் அடைப்படையில் உலக அளவில் பெரியதாகக் கருதபப்டும் காளேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தொடங்கி வைத்தார்.
தெலங்கானவில் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் பிரானாஹிட்டா ஆற்றுடன், கோதாவரி ஆறு சங்கமிக்கும் இடத்தில் ரூ.80,500 கோடி மதிப்பில் காளேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நீர்ப்பாசன திட்டத்தின் மூலம் ஒரு கோடி ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதியை பெறுவதோடு, தெலங்கானாவில் உள்ள 70 சதவீத மாவட்டங்களுக்கான வேளாண்மை, குடிநீர் மற்றும் ஹைதராபாத், செகந்திராபாத் பகுதிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும் என தெலங்கானா அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காளேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வெள்ளியன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் சந்திரசேகர ராவின் அழைப்பை ஏற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் மகாராஷ்டிரா முதலவர் தேவேந்திர பட்னவீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்விற்கு ஆளுநர் ஈ.எஸ் எல். நரசிம்மன் தலைமை தாங்கினார்.