

புது தில்லி: காங்கிரஸ் தோற்றால் இந்தியாவே தோற்றதாகுமா? அராஜகத்துக்கும் ஒரு எல்லை உண்டு என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி காரசாரமாகப் பேசியுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தற்போதெல்லாம் வாக்காளர்கள் மிக மிக விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். மக்களவையில் மட்டுமல்ல, மாநிலங்களவையிலும் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த முறை அதையெல்லாம் நினைவில் வைத்தே மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் நண்பர்களால், தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் பெற்ற தோல்வியை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது ஜனநாயகத்தில் ஒரு ஆரோக்கியமான விஷயமாகத் தெரியவில்லை.
விவசாயிகளுக்கு ரூ.2000 திட்டத்துக்காகத்தான் விவசாயிகள் பாஜகவுக்கு வாக்களித்ததாகக் கூறுவது, விவசாயிகளை அவமதிப்பதாகும். நான் கடுமையாக அதிர்ந்து விட்டேன். ஊடகங்களையும் விட்டு வைக்கவில்லை எதிர்க்கட்சிகள். ஊடகங்களால் தான் பாஜக வென்றது என்றால், ஊடகங்கள் விற்பனையாகிவிட்டதா? அப்போது தமிழ்நாடு, கேரளாவில் என்ன நடந்தது?
காங்கிரஸ் தோற்றுவிட்டது என்றால் அதற்காக இந்தியா தோற்றுவிட்டது, ஜனநாயகம் தோற்றுவிட்டது என்கிறார்கள் எதிர்க்கட்சிகள். அப்போது வயநாட்டில் இந்தியா தோற்றுவிட்டதா? ரே பரேலியில் இந்தியா தோற்றுவிட்டதா? திருவனந்தபுரத்தில் இந்தியா தோற்றுவிட்டதா? என்ன விதமான வாதம் இது?
1950ம் ஆண்டுக்குப் பிறகு நமது தேர்தல் நடைமுறை நன்கு மேம்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வாக்குப்பதிவே அதிக நேரம் நடந்தது. அதில் வாக்குப்பெட்டி கைப்பற்றுதல், வன்முறை வெடிப்பு என நிகழ்ந்தது. ஆனால் இப்போது குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு வாக்குகள் பதிவானது என்பது கூட செய்தியாகும் அளவுக்கு நிலைமை மாறியிருப்பதை வரவேற்க வேண்டும் என்று மோடி காரசாரமாகப் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.