பெங்களூரு: உங்களது அறியாமை எந்த நதியில் குளித்தாலும் போகாது என்று பிரதமர் மோடியை கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஞாயிறன்று நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுடன் பிரதமர் மோடி தனது நமோ ஆப் வழியாக உரையாடினார். அப்போது சிறுமியொருவர் டிஸ்லெக்சியா என்னும் கற்றல் குறைபாடுடைய குழநதைகளின் நலனுக்காக அரசு எடுத்துள்ள முயற்சிகள் பற்றிக் கேள்வி எழுப்பினார்.
அவர் தனது கேள்வியை முடிக்கும் முன்னரே குறுக்கிட்ட மோடி, 'இந்த திட்டமானது 40 - 50 வரையுள்ளவர்களுக்கும் பொருந்துமா? அப்படியென்றால் அத்தகைய குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்' என்று பதில் கேள்வி எழுப்பினார்.
மோடியின் இந்த பேச்சு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மனதில் கொண்டு பேசப்பட்டது என்று விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் உங்களது அறியாமை எந்த நதியில் குளித்தாலும் போகாது என்று பிரதமர் மோடியை கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
டிஸ்லெக்சியா என்னும் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளின் பெயரால் பிரதமர் மோடி செய்துள்ள அரசியல் விமர்சனங்கள் கொண்ட விடியோ ஒன்றை இப்போதுதான் பார்த்தேன். வெட்கமாக இல்லையா உங்களுக்கு மோடி? இதைவிட நீங்கள் கீழிறங்க முடியாது. உங்களது அறியாமை எந்த நதியில் குளித்தாலும் போகாது. அந்த குழந்தைகள் கற்றலில் மெதுவாக இருக்கலாம். ஆனால் உங்களைப் போல இதயமற்றவர்கள் கிடையாது.
இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.