புது தில்லி: மிஷன் சக்தி என்ற பெயரில், விண்ணில் இருந்த ஒரு செயற்கைக் கோளை இந்தியாவின் ஆயுதம் இன்று தாக்கி அழித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.
மோடியின் உரை தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
அப்போது மோடி கூறியதாவது, மிஷன் சக்தி என்ற பெயரில் விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு இன்று மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்கிற பெருமையை இன்று இந்தியா எட்டியுள்ளது.
இது, இந்தியாவின் செயற்கைக் கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
நமது நாட்டின் செயற்கைக் கோளை அழிக்கும் முயற்சியைத் தடுக்கும் வகையில், முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வெறும் 3 நிமிடங்களில் விண்வெளியில் இருந்த செயற்கைக் கோள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது என்று மோடி பெருமிதத்துடன் கூறினார்.