/

'பாதுகாவலரே திருடன்' என்றதற்கு உச்ச நீதிமன்றத்திடம் தான் மன்னிப்பு கேட்டேன், மோடியிடம் அல்ல: ராகுல்

பாதுகாவலரே திருடன் என்று நான் கூறியதற்கு உச்ச நீதிமன்றத்திடம் தான் மன்னிப்பு கேட்டேனே தவிர நரேந்திர மோடியிடம் அல்ல என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார்.

News image
Updated On :4 மே 2019, 7:43 am

பாதுகாவலரே திருடன் (சௌக்கிதார் சோர் ஹே) என்று நான் கூறியதற்கு உச்ச நீதிமன்றத்திடம் தான் மன்னிப்பு கேட்டேனே தவிர பாஜக-விடமோ அல்லது நரேந்திர மோடியிடமோ அல்ல என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு என்பதால் மட்டுமே அவ்வாறு தெரிவித்ததாகவும் விளக்கமளித்தார். 

பாதுகாவலரே திருடன் என்ற கோஷம் தற்போது நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. நீங்கள் எங்கு சென்று சௌக்கிதார் (பாதுகாவலர்) என்றாலும் மக்கள் உடனே சோர் (திருடன்) என்று பிரதிபலிப்பார்கள். ஏனென்றால் இந்த கோஷம் என்றென்றைக்கும் அழியாமல் நிலைத்து நின்றுவிட்டது.

மசூத் அஸார் ஒரு பயங்கரவாதி. நிச்சயம் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று பயங்கரவாதத்தின் மீதும் எந்த சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், கைது செய்யப்பட்டிருந்த மசூத் அஸாரை பாகிஸ்தானுக்கு மீண்டும் அனுப்பி வைத்தது யார்?

அவர் பாகிஸ்தானுக்கு எப்படி சென்றார்? அவரை எந்த அரசாங்கம் அங்கு அனுப்பி வைத்தது? பயங்கரவாதத்தின் முன் அடிபணிந்தது பாஜக தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கடுமையாக விமர்சித்தார். 

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாருக்கு இந்திய ஏர்லைன்ஸ் விமானம் 155 பயணிகளுடன் 1999-ஆம் ஆண்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்தையில் பயணிகளை மீட்கும் விதமாக இந்திய சிறையில் இருந்த பயங்கரவாதி மசூத் அஸாரை அப்போதைய பாஜக அரசு விடுவித்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.