புது தில்லி: சரியோ தவறோ தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று கூறி காங்கிரஸ் எம்.பியின் மனுவினை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறும் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி காங்கிரஸ் எம்பி சுஷ்மிதா தேவ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, காங்கிரஸ் அளித்த புகார்களை தேர்தல் ஆணையம் முறையாக ஆய்வு செய்யாமல், அதை நிராகரிப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
அதற்கு ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் காங்கிரஸ் தாக்கல் செய்துள்ள புகார் மனுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சரியோ தவறோ தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று கூறி காங்கிரஸ் எம்.பியின் மனுவினை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்த வழக்கானது புதனன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
சரியோ தவறோ நீங்கள் கூறிய விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இதுதொடர்பாக மேற்கொன்டு விசாரிக்க முடியாது.
ஒருவேளை உங்களுக்கு ஆணையத்தின் உத்தரவுகளில் ஆட்சேபனை இருந்தால் தனியாக வழக்குத் தொடரலாம்.
இவ்வாறு நீதிமன்றத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.