ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு பாஜகவை ஆதரிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்று மண்டியா தொகுதியில் வென்றுள்ள சுயேச்சை எம்.பி.யும் நடிகையுமான சுமலதா தெரிவித்தார்.
அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மண்டியா மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, முதல்வர் குமாரசாமியின் மகனும் மஜத வேட்பாளருமான நிகில் குமாரசாமியை 1,25,876 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, வெற்றிபெற்றார். நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக மண்டியா மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் யாரையும் பாஜக நிறுத்தவில்லை. தற்போது மண்டியா தொகுதியில் வெற்றி பெற்றிருப்பதைத் தொடர்ந்து, பெங்களூரு, டாலர்ஸ் காலனியில் உள்ள இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பாவைச் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். பின்னர், இருவரும் சேர்ந்து சதாசிவ நகரில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேரில் சந்தித்து, சுமலதா நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் நடிகை சுமலதா கூறியது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் சேர இயலாது; ஆனால் ஆதரவு அளிக்கலாம். பிரச்னையின் அடிப்படையில் ஆதரவளிக்கலாம் என்று நான் தெரிந்து கொண்டேன். எனது தொகுதி மக்களின் கருத்தே எனக்கு முக்கியமானது என்பதை ஆரம்பம் முதல் கூறி வந்திருக்கிறேன். மண்டியா தொகுதியைச் சேர்ந்த அனைத்து வட்டங்களுக்கும் சென்று மக்களுக்கு நன்றி கூற திட்டமிட்டிருக்கிறேன். அப்போது எனது ஆதரவாளர்கள், வாக்காளர்களிடம் மண்டியாவின் நலன் கருதி நான் ஆற்ற வேண்டிய பணிகள், திட்டங்கள் குறித்து விவாதிப்பேன். அப்போது பாஜகவுக்கு ஆதரவளிப்பது குறித்து மக்களின் கருத்தறிந்து முடிவெடுத்து செயல்படுவேன்.
மண்டியா தொகுதியில் எனது வெற்றிக்கு பாஜக முழுமையான ஆதரவை அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜகவுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கவே எடியூரப்பா, எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்தேன். கர்நாடகத்திலும் தேசிய அளவிலும் பாஜக சிறந்த முறையில் வெற்றி பெற்றிருப்பதற்காக வாழ்த்துகிறேன். இந்த வெற்றி சுனாமியைப் போன்றது. மண்டியா தொகுதியில் நான் பெற்ற வெற்றி வரலாற்று சிறப்புவாய்ந்தது. மண்டியாவில் உள்ள அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எனக்கு ஆதரவளித்ததுதான் இதற்குக் காரணம். எனவே, மண்டியா மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
அப்போது பாஜக மாநிலத்தலைவர் எடியூரப்பா கூறியது: ஆதரவாளர்கள், வாக்காளர்களைக் கலந்தாலோசித்த பிறகு பாஜகவுடன் இணைந்து செயலாற்றுவது குறித்து முடிவெடுக்கப் போவதாக சுமலதா தெரிவித்தார். தொகுதி மக்களின் கருத்தறிந்த பிறகு, இதுபற்றி எங்களுக்குத் தெரிவிப்பார் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









