நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இதில், பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம், தில்லி நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்மொழிய, மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் வழிமொழிய, புதிய எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து 17-ஆவது மக்களவைக்கு மத்தியில் ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார் .
இந்நிலையில், குடியரசுத்தலைவர் மாளிகையில் வருகிற 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி பதவியேற்பு விழா நடைபெறும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது. அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.