தில்லியில் நிலவி வரும் மோசமான காற்று மாசு குறித்து பிரதமருக்கான முதன்மைச் செயலர் தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
தில்லி காற்று மாசுவை கடுப்படுத்துவது குறித்து பிரதமருக்கான முதன்மைச் செயலர் பிகே மிஸ்ரா பஞ்சாப், ஹரியாணா மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
தில்லி அமைச்சரவைக்கான செயலர், அங்கு நிலவும் சூழலை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும். மாநில தலைமைச் செயலர்கள், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த சுமார் 300-க்கும் மேற்பட்ட குழுக்கள் களத்தில் செயல்பட்டு வருகின்றன. இதற்குத் தேவையான இயந்திரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: தில்லியில் பள்ளிகளுக்கு நவ.8ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு!
முன்னதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று தெரிவிக்கையில், "காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.
தில்லியில் தீபாவளி பண்டிக்கைக்குப் பிறகு நிலவி வரும் மோசமான காற்று மாசு காரணமாக அங்கு சுகாதார அவசர நிலை பிறபிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு குறித்து பிரதமருக்கான முதன்மைச் செயலர் ஏற்கெனவே கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டுள்ளார். அது தவிர பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களும் அடுத்தடுத்து நடைபெற்றுள்ளன. இதில், அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவைக்கான செயலரும் பங்கேற்றிருந்தார்.