புகழ்பெற்ற தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா நகரில் காற்றை மாசுபடுத்தியதற்காக உத்தரப் பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்.எச்.ஏ.ஐ) ரூ.6.84 கோடி அபராதம் விதித்துள்ளது.
தில்லியில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதை அடுத்து, அங்கு பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தில்லியில் சில தினங்களாக புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க கட்டுமானப்பணிகள் நிறுத்தம், வாகனக் கட்டுப்பாடு என அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான தாஜ்மஹால் உள்ள ஆக்ரா நகரமும் காற்று மாசுபாட்டுக்கு ஆளாகியுள்ளது. காற்று மாசுபாட்டினால் தாஜ்மஹாலின் முகப்பிலும் புகை சூழ்ந்துள்ளது. இதையடுத்து ஆக்ரா நகரில் காற்றை மாசுபடுத்தியதற்காக உத்தரப்பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்.எச்.ஏ.ஐ) ரூ.6.84 கோடி அபராதம் விதித்துள்ளது.
நகரைச் சுற்றியுள்ள கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தவும், ஆக்ரா நகரில் காற்று மாசுபாட்டைக் குறைக்க தண்ணீரைப் பாய்ச்சுதல் உள்ளிட்ட துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதை மீறியும், கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிட்டால், கட்டுமானக் கழிவை அப்புறப்படுத்தும் விதிகளை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.