புவனேஸ்வர்: சார்ஜ்ஜில் போட்டபடி, செல்போனில் பேசாதீர்கள் என்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், உறங்கும் போது செல்போனை அருகே சார்ஜில் போடும் பழக்கம் கொண்டவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இந்த சம்பவம்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜகத்சிங்புர் மாவட்டத்தில் சார்ஜ்ஜில் போட்டிருந்த செல்போன் வெடித்ததில், அருகே உறங்கிக் கொண்டிருந்த 22 வயது இளைஞர் மரணம் அடைந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞர் உறங்கிக் கொண்டிருக்கும் போது, முழுவதுமாக சார்ஜ் ஏறிய செல்போன் திடீரென வெடித்துச் சிதறியது. இதில், அருகே இருந்த குணா பிரதான் என்ற இளைஞர் மரணம் அடைந்தார்.
பாரதீப் பகுதியில் ஜெகன்னாதர் கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளியான குணா பிரதான் மரணம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம், தினமும் இரவில் தலையணைக்கு அருகே செல்போனை சார்ஜில் போட்டபடி உறங்கும் அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.