கருப்புப் பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமார் கருப்புப் பண மோசடி வழக்கில் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிவக்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த போதும், டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இதன்பின்னர், பல்வேறு கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்திய சிவக்குமாருக்கு திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர், பெங்களூரு சேஷாத்திரபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், சிவக்குமாரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் நரிமன் மற்றும் ரவீந்திர பட் ஆகியோரது முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில், அமலாக்கத்துறையின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் உள்ள வாதங்களை மாற்றாமல், அப்படியே நகல் எடுத்து இவ்வழக்கில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.