ஆளுநருடனான சந்திப்பு ரத்து: இறுதி முடிவைத் தீர்மானிக்கிறதா பவார்-சோனியா சந்திப்பு?
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆட்சி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சிவசேனையும், கட்சியின் முன்னாள் தலைவர் பால் தாக்கரேவின் 7-வது நினைவு தினத்தின்போது சிவசேனையைச் சேர்ந்தவர் முதல்வராகப் பதவியேற்பார் என தனது விருப்பத்தை பலமுறை வெளிப்படுத்தியிருந்தது.
இதனிடையே, இன்று மாலை சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஆளுநரைச் சந்திப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சந்திப்பானது அரசு அமைப்பது குறித்த சந்திப்பு அல்ல என விளக்கம அளித்தபோதிலும் இதுகுறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், ஆளுநருடனான சந்திப்பானது தேதியும் நேரமும் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, சிவசேனை கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே இன்று மாலை விடுத்த அறிக்கையில்,
"சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநர் பிஎஸ் கோஷியாரியைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அனைத்துக் கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் ஆணையத்திற்கு செலவு விவரங்களை அளிப்பதில் மும்முரமாக இருப்பதாலும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர் சேதங்களை பார்வையிட பயணம் மேற்கொண்டுள்ளதாலும் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஆளுநரைச் சந்திப்பதற்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ராஜீவ் சதவ் தெரிவிக்கையில், "கடந்த இரண்டு நாட்களாக காங்கிரஸ், சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பல்வேறு கூட்டங்களை நடத்தி ஆலோசனை நடத்தியுள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரத் மகாராஷ்டிர மாநிலத்துக்கான பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கேவைச் சந்தித்து விளக்கம் அளித்து, எதிர்கால யுத்திகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, மகாராஷ்டிரத்தில் அரசு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்" என்றார்.
அதேசமயம், புணேவில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அக்கட்சியின் மையக் கமிட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சந்திக்கிறது. இந்த சந்திப்புக்குப் பிறகு சரத் பவார் ஞாயிறு பிற்பகல் தில்லிக்குப் புறப்பட்டுச் சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மாலை 4.30 மணிக்கு சந்திக்கிறார்.
இதனிடையே, பால் தாக்கரேவின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவசேனை ஞாயிற்றுக்கிழமை பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பால் தாக்கரேவின் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான சிவசேனை தொண்டர்கள் ஒன்று கூடி மரியாதை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இந்த நிகழ்ச்சிக்கு யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை எனவும், யார் வேண்டுமானாலும் வந்து பால் தாக்கரேவுக்கு மரியாதை செலுத்தலாம் எனவும் சிவசேனை தெரிவித்துள்ளது.
எனவே, பவார் - சோனியா சந்திப்பின்போது சிவசேனை பிரதிநிதி யாரும் பங்கேற்காததால், மகாராஷ்டிரத்தில் அரசு அமைப்பது குறித்த இறுதி முடிவு இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம், சரத் பவார் மற்றும் சோனியா காந்தி ஆகியோருக்கிடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
முன்னதாக, சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து கடந்த இரு தினங்களாக விவாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

