குஷிநகர்: இதெல்லாம் எப்போது தெரிய வந்தது என்றால், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் தனக்கு வயிறு வலிக்கிறது என்று சொன்ன போதுதான்.
ஜமாலுதீன், உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரைச் சேர்ந்த இளைஞர். பார்ப்பதற்கு உங்களைப் போல, என்னைப் போல தான் இவரும் இருப்பார்.
ஆனால், இவர் நம்மைப் போல இல்லவே இல்லை. இவரது உடல் உறுப்புகள் எல்லாம் தலைகீழாகப் பொருத்தப்பட்டிருக்கிறது. அதாவது இதயம் அவரது வலது பக்கத்திலும், கல்லீரல், பித்தப்பை எல்லாம் இதயம் இருக்க வேண்டிய இடது பக்கத்திலும் அமையப்பெற்றுள்ளது.
ஆனால் இதுவரை எந்த சிக்கலும் இல்லாமல் இவர் வாழ்ந்துவிட்டார். தனக்கு இதுபோன்றதொரு சிக்கல் இருக்கிறது என்பதே,சமீபத்தில் இவருக்கு வயிறு வலிக்கிறது என்று சொல்லி மருத்துவரை சந்தித்த போதுதான்.
மருத்துவரை சந்தித்த போது இவரை விட மருத்துவர்தான் அதிர்ச்சியில் உறைந்து போனார் இவரது எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளைப் பார்த்து.
இவரது பித்தப்பையில் கற்கள் இருப்பதை கண்டறிந்திருப்பதாகக் கூறும் மருத்துவர் ஷஷிகாந்த் தீட்சித், ஆனால், இவரது உடல் உறுப்புகள் எல்லாம் தலைகீழாக இடம் மாறி இருப்பதால், இவருக்கு அறுவை சிகிச்சை செய்து, கற்களை அகற்றுவது மிகவும் கடினம். இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் முப்பரிமாண லேப்ரோஸ்கோபிக் இயந்திரங்கள் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.
பித்தப்பையில் இருக்கும் கற்களை அகற்றுவதற்கான சிகிச்சை அவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதுபோல அனைத்து உடல் உறுப்புகளுமே இடம் மாறியிருப்பது இவருக்கு மட்டுமல்ல, இவரைப் போன்று 1943ம் ஆண்டும் ஒருவருக்கு அனைத்து உறுப்புகளும் இடம்மாறி இருந்ததாக மருத்துவ உலகம் கூறுகிறது. இதுபோன்ற நபர்களுக்கு சிகிச்சை அளிப்பது என்பதே மிகவும் கஷ்டம். அதுவும் அறுவை சிகிச்சை என்றால் மிக மிக கஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.