கர்தார்பூர் செல்லும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவுடன் இணைந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் பங்கேற்று நன்கானா குருத்வாராவுக்கு பயணம்
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவுடன் இணைந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் பங்கேற்று நன்கானா குருத்வாராவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

இந்த யாத்திரை மேற்கொள்வதற்கு எளிதாக இருக்கும் வகையில், பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இச்சாலை வழியாகச் செல்லும் யாத்ரீகர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். 

இதில், குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், மறுபுறம் கர்தார்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைத்து வருகின்றன. குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம், வரும் நவம்பரில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்த வழித்தடம் வரும் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி திறக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

இதன் திறப்பு விழாவில் எல்லை தாண்டி கர்தார்பூருக்கு செல்லும் அனைத்துக் கட்சிக் குழுவுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமை ஏற்கவுள்ளார். இதன்பிறகு, குருத்வாராவுக்கு தினசரி 5,000 யாத்ரீகர்கள் யாத்திரை மேற்கொள்ளலாம்.

இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மன்மோகன் சிங்கை சந்தித்து கர்தார்பூர் செல்லும் முதல் பயணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். இதன்பிறகு, மன்மோகன் சிங்கும் அமரீந்தர் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவுடன் கர்தார்பூர் செல்லவுள்ளதாக பஞ்சாப் அரசு அறிவித்தது.

மன்மோகன் சிங் தவிர்த்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரையும் சந்தித்து அமரீந்தர் சிங் அழைப்பு விடுத்துள்ளார். அவர்கள் இருவரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

முன்னதாக, கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பங்கேற்க மன்மோகன் சிங்குக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி அழைப்பு விடுத்தார். ஆனால், மன்மோகன் சிங் இந்த அழைப்பை நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com