சென்னை: ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் 'துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை (General Departmental Competitive Examination), தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை' என்றும், ‘ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும்’ என்றும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
ரயில்வேயின் இந்த நடவடிக்கை ஹிந்தி தவிர்த்து பிற மாநில மொழிகளை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஒழிக்கும் முயற்சியென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சென்னையில் போராட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வேயின் அனைத்துப் பிராந்திய பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதியுள்ள கடிதத்தில், 'ரயில்வேயில் துறை சார்ந்த ஜிடிசிஇ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம்' என்று ரயில்வே வாரியம் விளக்கம் தெரிவித்துள்ளது.