புதிய வாகனச் சட்டத்துக்கு பெரும்பாலான மாநிலங்கள் ஆதரவு அளித்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி செவ்வாய்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதிய வாகனச் சட்டத்துக்கு குஜராத் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இரு மாநிலங்கள் தான் அதுவும் இரு குறிப்பிட்ட சட்டங்களுக்கு மட்டும் தான் அதிருப்தி தெரிவித்துள்ளது. மற்றபடி அந்த மாநிலங்களிலும் இந்த புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் இதற்கு முழு ஆதரவு அளித்துள்ளன.
இந்த புதிய வாகனச் சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற அனைவரின் ஆதரவைப் பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பெறப்படும் அபராதத் தொகையைக் கொண்டு நிதி திரட்ட மத்திய அரசு முயற்சிக்கவில்லை. அதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
மக்கள் தற்போது சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அனைவரும் தங்கள் வாகனம் தொடர்பான ஆவணங்களை சரிபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.
பாஜக ஆளும் குஜராத் மற்றும் உத்தரண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த புதிய சட்டத்தில் இருந்து சில விதிகளுக்கான அபராதத் தொகையை குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதுபோன்ற நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசும் பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.