ஜம்மு-காஷ்மீரில் 5 தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் அந்த மாநில அரசு நிர்வாகம் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு கடந்த மாதம் 5-ஆம் தேதி ரத்து
செய்த பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், அரசியல் தலைவர்களைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு காஷ்மீர் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எஸ்.ஏ.நஸீர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், இந்த மனு மீது 2 வாரங்களில் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.