தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கை இன்று (வியாழக்கிழமை) செலுத்தினர்.
17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, அசாம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேச ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் தனது மனைவி விமலா நரசிம்மனுடன் செகந்தராபாத் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ராஜ்பவன் அருகே உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது மனைவி ஷோபா ராவ் ஆகியோர் மேடக் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சின்டமடக்கா கிராமத்தில் தங்களது வாக்கை செலுத்தினர்.
ஏஐஎம்ஐஎம் தலைவரும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான அசாதுதின் ஒவைசி சாஸ்திரிபுரத்தில் தனது வாக்கை செலுத்தினார்.
தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரும் நல்கொண்டா மக்களவைத் தொகுதி வேட்பாளருமான உத்தம் குமார் ரெட்டி கோடாட் பகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தனது மனைவி அம்ருதா மற்றும் தாயார் சரிதா ஃபட்னவீஸ் ஆகியோருடன் நாக்பூர் தொகுதிக்குட்பட்ட தரம்பேத் ஹிந்தி உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.