முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி (66), உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார். பாஜக-வின் மாணவர் பிரிவான ஏபிவிபி-யில் இருந்து படிப்படியாக மத்திய அமைச்சர் வரை உயர்ந்த ஜேட்லி மறைவுக்கு அனைத்து கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் எப்போதும் உயிர்ப்புடன் இருந்த அருண் ஜேட்லி, கடைசியாக காங்கிரஸ் கட்சி மீதான தனது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவு செய்திருந்தது தற்போது நினைவுகூரப்பட்டு வருகிறது. அதில்,
காங்கிரஸ் கட்சி தற்போது தலையில்லாமல் (தலைமை) செயல்பட்டு வருகிறது. அது நாட்டு மக்களிடம் இருந்து அக்கட்சியை மேலும் அந்நியப்படுத்தி வருகிறது. புதிய இந்தியா எப்போதோ பிறந்துவிட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி அதனை இப்போது வரை உணரவில்லை.
அதிலும், கடைசி இடத்துக்கு செல்லும் போட்டியில் காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயல்பட்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டது என காட்டமாக விமர்சித்திருந்தார்.