ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி வியாழக்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
சிஆர்பிஎஃப் வீரர்களின் உயிரிழப்பு ஒட்டுமொத்த தேசத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தருணத்தில் வீரர்களின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக நாங்கள் அனைவரும் இருப்போம். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் ஆந்திர அரசு வழங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அறிவித்தார்.