இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று..
2015ம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள், மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்தவர் திடீரென்று காலமானார் என்கிற செய்தி ஒட்டுமொத்த உலகத்தை, குறிப்பாக, இந்தியத் திருநாட்டை ஒரு விநாடி ஸ்தம்பிக்கச் செய்தது என்று சொன்னால் அது மிகையில்லை.
உலக சரித்திரத்தில் ஒரு மனிதனின் மரணம் இதுபோல எல்லை, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் பாதித்திருக்குமா என்பது சந்தேகம்தான். இனம், மொழி, மதம், சாதி வேறுபாடுகள், பெரியவர் - சிறியவர், பணக்காரர் - ஏழை, படித்தவர் - பாமரர் என்கிற அத்தனை வேறுபாடுகளையும் மீறி, எந்தவொரு பிரிவினருக்கும் மாறுபட்ட கருத்து இல்லாமல் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட மனிதர் ஒருவர் நம்மிடையே வாழ்ந்தார் என்றால் அது ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் ஒருவராக மட்டுமே இருக்க முடியும்.
இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக்கி உலக அரங்கில் தலைநிமிர வைத்தவர் என்பது மட்டுமல்ல அவரது பங்களிப்பு. இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின், மாணவச் செல்வங்களின் மனதில் "வல்லரசான வலிமையான பாரதம்" என்கிற நம்பிக்கையை விதைத்து, நாளைய தலைமுறையின் கனவுக் கதாநாயகனாக, வழிகாட்டியாகத் திகழ்ந்தார் என்பதுதான் அவரது தனிப்பெரும் சிறப்பு.
டாக்டர் அப்துல் கலாம் வெறும் கனவல்ல.. எழுச்சி...!