ஒரு தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை, அதே சமயம் தனது வாக்கினையும் வீணாக்க முடியாது என்று நினைப்பவர்களுக்காகக் கொண்டு வரப்பட்டது நோட்டா.
உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, 2013ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்பிறகு 2014ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது நோட்டாவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தன.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் 0.28 சதவீதம் முதல் 3.01 சதவீதம் வரையிலான வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தன. ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால் இந்தியாவில் மட்டும் அனைத்து மாநிலங்களிலும் நோட்டாவுக்கு விழுந்த ஓட்டுகள் 40%.
இதில் அதிகபட்சமாக புதுச்சேரியில் மட்டும் 3.01 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கடுத்த இடத்தில் மேகாலயாவில் 2.8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அருணாச்சல், பிகார், கோவா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், மிசோரம், ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், டாமன் மற்றும் டையூ உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன.
லட்சத்தீவுகள், ஹரியானா ஆகிய மாநிலங்களில் மட்டும்தான் நோட்டாவுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
தமிழகத்தை எடுத்துக் கொண்டால், 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 1.43% வாக்காளர்கள் நோட்டாவைப் பயன்படுத்தி தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் சில கட்சி வேட்பாளர்களை விட, நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..