
ரேபரேலி: நமது இலக்கு 2022 உத்தரபிரதேச சட்டபேரவைத் தேர்தல்தான் என்று அம்மாநில காங்கிரஸ் தொண்டர்களிடம், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி மூன்று நாள் சுற்றுப் பயண்மாக அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். வியாழன் அன்று அவர் தனது சகோதரர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியின் தலைநகரான கவுரிகஞ்சில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் தொண்டர்களிடம், 'நீங்கள் தேர்தலுக்கு தயாராகி விட்டீர்களா? நான் 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலைப் பற்றி பேசவில்லை; ஆனால் 2022 உத்தரபிரதேச சட்டபேரவைத் தேர்தலை கேட்கிறேன்' என்று தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 23-ஆம் தேதியன்று உத்தரபிரதேச கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்ட போது, கட்சித் தலைவரான ராகுல் காந்தி செய்தியாளர்களிடம், 'பிரியங்கா வெறுமனே 4 மாதங்களுக்காக அங்கு அனுப்பப்படவில்லை; அவர் பெரிய திட்டத்துடன்தான் அங்கு அனுப்பப்பட்டுள்ளார்.பாஜகவை 2019-இல் மட்டும் அல்ல, 2022-லும் தோற்கடிப்போம்' என்று கூறியிருந்தார்.
பிரியங்கா காந்தியின் பேச்சு அதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...