சென்னை: காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று ராகுல் காந்தியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடந்து நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்ததாகவும், ஆனால் அதை மூத்த தலைவர்கள் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியானது.
அதேநேரம் ராஜிநாமா முடிவில் ராகுல் உறுதியாக இருப்பதாகவும் தில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று ராகுல் காந்தியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று ராகுல்காந்தியிடன் ஸ்டாலின் தொலைபேசியில் பேசியுள்ளார்.அப்போது 'காங்கிரஸ் தலைவராக தொடருங்கள்; தலைவர் பதவியை விட்டு விலகவேண்டாம் என்றும், தேர்தலில் தோற்றாலும் மக்களின் மனங்களை வென்றுள்ளீர்கள்’ என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
அதேநேரம் திமுகவின் வெற்றிக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.