பிகாரில் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பிக்க மாநில கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்களது படிப்பை தொடர முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனை தவிர்க்கும் வகையில் பல்வேறு மாநிலங்களும் இணையவழிக் கல்வியை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் போதிய இணைய வசதி இல்லாமல் இணைய வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
இந்த சிக்கலைக் கருத்தில் கொண்டு பிகாரில் மாநிலக் பள்ளிக்கல்வித்துறை தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காணொலிகள் வார இறுதி நாட்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேகமாக துறை நிபுணர்களிடமிருந்து பாட விளக்க காணொலிகள் பெறப்படுவதாகவும் பிகார் அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக பிகாரில் வானொலி மூலமும், ஸ்மார்ட் போன் மூலமும் கல்வி கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.