முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகா்ஜியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தகவல் வெளியிட்டுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை பிரணாப் முகா்ஜி அனுமதிக்கப்பட்டார். அவரது மூளையில் ரத்தம் உறைந்து ஏற்பட்ட கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே கரோனா பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென அவர் கோமா நிலைக்குச் சென்றார். இதன் தொடர்ச்சியாக, 'பிரணாப் முகா்ஜியின் உடல்நிலையில்எந்த முன்னேற்றமும் இல்லை. அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவா்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்’ என்று ராணுவ மருத்துவமனை நேற்று தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று பிரணாப் முகா்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நேற்று, தந்தையைக் காண மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். கடவுளின் ஆசிர்வாதத்துடன், உங்களின் நல்வாழ்த்துக்களுடனும் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. சிகிச்சைக்கு அவரது உடல்நிலை ஒத்துழைத்து வருகிறது. விரைவில் அவர் குணமடைந்து திரும்பி வருவார்' என்று பதிவிட்டுள்ளார்.