
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை எனவும் அவருக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் உள்ள ரத்தக் கட்டியை நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு அவர் கோமா நிலைக்குச் சென்றார். இதனிடையே அவருக்கு கரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
மேலும், தினமும் பிரணாப்பின் உடல்நிலை குறித்து தகவல் வெளியிட்டு வரும் ராணுவ மருத்துவமனை நேற்று முன்தினம், புதிதாக அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், நேற்றைய தினம் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியது.
இந்நிலையில், இன்று பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை எனவும் அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.