முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மூளையில் ரத்தக் கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தில்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று காலமானார். அவருக்கு வயது 84. பிரணாப் முகர்ஜி காலமானதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்: பிரணாப் முகர்ஜியின் இழப்பு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பார பிரார்த்தனை செய்கிறேன். பிரணாப் முகர்ஜியின் இழப்பு தேசத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
பிரணாப்பின் மறைவுக்கு இரங்கல் வெளியிட்டிருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் குடியரசுத் தலைவர், முன்னாள் மத்திய நிதியமைச்சர், சிறந்த சமூக சேவகர் பிரணாப் முகர்ஜி மறைந்த செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது. பிரணாப் முகர்ஜி அவர்கள் நம் இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் முன்னிறுத்துபவர்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழி இரங்கல் செய்தியில்..
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மரணம் நம் நாட்டுக்கு பெரும் இழப்பு. பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் இன்முகத்தோடு பதில் அளித்தவர். எந்த சூழலிலும் கேள்விகளை தவிர்க்காதவர்.
ஒரு மூத்த பாராளுமன்றவாதியாக, பல்வேறு ஆலோசனைகளை கூறி வழிநடத்தியுள்ளார். சிறந்த நிதியமைச்சராகவும், குடியரசுத் தலைவராகவும் அவர் இந்நாட்டுக்கு ஆற்றிய பணிகள் அளப்பறியது. அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கு என் இரங்கல்.
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி: முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. இந்திய திருநாட்டின் மகத்தான மனிதர்களுள் ஒருவர். அவரின் மறைவு நாட்டிற்கு ஈடு செய்ய முடியா பேரிழப்பு. அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.