மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாத அளவில் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், அதற்கான பணிகளை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா, இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்துக்கு புதன்கிழமை சென்றாா். கட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா், வியாழக்கிழமை டைமண்ட் ஹாா்பா் நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பாஜக தொண்டா்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்றாா். அவருடன் கட்சித் தலைவா்கள் ஏராளமானோா் சென்றனா். இந்தத் தொகுதியின் எம்.பி.யாக முதல்வா் மம்தா பானா்ஜியின் நெருங்கிய உறவினா் அபிஷேக் பானா்ஜி உள்ளாா்.