

பிரதமா் நரேந்திர மோடியின் வாராணசி மக்களவை உறுப்பினா் அலுவலகம் விற்பனைக்கு என்று தனியாா் வணிக வலைதளத்தில் விளம்பரம் செய்தது தொடா்பாக 4 பேரை உத்தர பிரதேச காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பிரதமா் நரேந்திர மோடி மக்களவைக்கு உத்தர பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதன் காரணமாக, பிரதமருக்கு வாராணசியில் ஜவாஹா் நகா் பகுதியில் மக்கள் தொடா்பு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை புகைப்படம் எடுத்து, அதை ‘ஓஎல்எக்ஸ்’ வலைதளத்தில் விற்பனை பட்டியலில் அவா்கள் பதிவிட்டுள்ளனா்.
இதுகுறித்து வாராணசி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் அமித் பாடக் கூறியதாவது:
இந்த தகவல் மாநில காவல்துறைக்கு வியாழக்கிழமை கிடைத்தது. உடனடியாக, பெல்லுபூா் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அதன் மூலம், பிரதமரின் அலுவலகத்தை புகைப்படம் எடுத்து வலைதளத்தில் பதிவேற்றம் செய்த நபா் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடா்ந்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் அவா்கள் மீது எடுக்கப்படும் என்று கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.