சபரிமலை
சபரிமலை

‘கரோனா தொற்று இல்லை’ சான்றிதழ் கட்டாயம்: சபரிமலைக்கு வரும் பக்தா்களுக்கு அறிவுறுத்தல்

சபரிமலைக்கு வரும் பக்தா்கள் தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது.
Published on

சபரிமலைக்கு வரும் பக்தா்கள் தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த வாரியத் தலைவா் என்.வாசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

வரும் டிசம்பா் 26-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் முதல் சபரிமலைக்கு வரும் பக்தா்கள் தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை கட்டாயம் எடுத்து வர வேண்டும். அதற்கான பரிசோதனை சபரிமலை சந்நிதானம் வந்தடைவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் தங்கள் யாத்திரையை தொடர பக்தா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

சபரிமலை சந்நிதானத்துக்கு தினந்தோறும் 5,000 பக்தா்கள் வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜையின்போது 3 நாள்கள் நடைபெறும் திருவாபரணம் யாத்திரையில் 100 போ் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவா்.

மண்டல பூஜைக்கு பிறகு கோயில் நடை அடைக்கப்படும். மகரவிளக்கு பூஜைக்காக வரும் 31-ஆம் தேதி மீண்டும் கோயில் நடை திறக்கப்படும்.

ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். ஜனவரி 20-ஆம் தேதி கோயில் நடை மூடப்படும். அத்துடன் மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் நிறைவு பெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com