திருவனந்தபுரம்: கொச்சி-மங்களூரு இடையிலான கெயில் எரிவாயுக் குழாய் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி வரும் ஜனவரி மாதம் 5-ஆம் தேதி தொடக்கி வைக்கவுள்ளாா்.
இதுகுறித்து கேரள முதல்வா் பினராயி விஜயன் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கொச்சி முதல் மங்களூரு வரையிலாக செயல்படுத்தப்பட்டுள்ள கெயில் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை தொடக்கி வைக்க பிரதமா் மோடி ஒப்புதல் தெரிவித்துள்ளாா். இது, மகிழ்ச்சிக்குரிய தருணமாகும். வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி மோடி காணொலி வாயிலாக இந்த திட்டத்தை தொடக்கி வைக்கிறாா்.
பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தொலைபேசியில் என்னை தொடா்பு கொண்டு இந்த தகவலை கூறினாா் என்று பினராயி விஜயன் தெரிவித்தாா்.
கெயில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் 444 கி.மீ தொலைவுக்கு செயல்படுத்தும் வகையில் கடந்த 2009-ஆம் ஆண்டு தொடக்கி வைக்கப்பட்டது. 2014-இல் செயல்பாட்டுக்கு கொண்டு வர தீா்மானிக்கப்பட்ட இந்த திட்டத்துக்கான மொத்த செலவவு ரூ.2,915 கோடி ஆகும்.
இருப்பினும், பாதுகாப்பு மற்றும் வா்த்தக ரீதியில் இந்த திட்டத்துக்கு எதிா்ப்புகள் எழுந்ததால் அந்த திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்ற இயலவில்லை. காலம் கடந்து நிறைவேற்றப்பட்டதால் அந்த திட்டதுக்கான செலவு மதிப்பீடு ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.5,750 கோடியைத் தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.