மதமாற்றத்தை தடை செய்யும் அவசர சட்டம்: ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது ம.பி. அரசு

மத்திய பிரதேசத்தில் மதமாற்றத்தைத் தடை செய்வதற்கான அவசர சட்டத்தை இயற்றியுள்ள மாநில பாஜக அரசு, அதை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்துள்ளது.
Updated on
1 min read

மத்திய பிரதேசத்தில் மதமாற்றத்தைத் தடை செய்வதற்கான அவசர சட்டத்தை இயற்றியுள்ள மாநில பாஜக அரசு, அதை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்துள்ளது.
 மத்திய பிரதேசத்தில் திருமணத்துக்காக மதம் மாறுவது, கவர்ச்சிகர வாக்குறுதிகள் அளித்தும், கட்டாயப்படுத்தியும் மதம் மாற்றுவது ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் மத சுதந்திர சட்டம் 2020-க்கான மசோதா இயற்றப்பட்டுள்ளது.
 இதுபோன்ற மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கும் இந்த சட்ட மசோதாவுக்கு மாநில அமைச்சரவை கடந்த 26 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
 காணொலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது அவசர சட்டமாக இயற்றப்பட்டது. இதையடுத்து, இந்த அவசர சட்டம் ஆளுநர் ஆனந்திபென் படேல் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
 ஐந்து எம்எல்ஏக்கள், பேரவைச் செயலகப் பணியாளர்கள் 61 பேர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மாநில சட்டப் பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 இதையடுத்து, முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் இணைய வழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மதமாற்ற தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு அவசர சட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
 "எங்களது மகள்களை பொய்யான வாக்குறுதிகள் மூலம் கவர்ந்தும், ஏமாற்றியும், மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் திருமணம் செய்து கொள்பவர்களைக் கையாளுவதற்கு இந்த சட்டம் பயனுள்ளதாக இருக்கும். இந்த சட்டத்துக்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிப்பார்' என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com