புது தில்லி: புது தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், இந்த ஆண்டு மகளிர் சிஆர்பிஎஃப் வீராங்கனைகளின் சாகச நிகழ்ச்சிகளும் முதல் முறையாக இடம்பெற உள்ளது.
ஜனவரி 26ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் மகளிர் சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த 65 பேர் பங்கேற்று மோட்டார் சைக்கிள்களில் சாகசங்களை நிகழ்த்த உள்ளனர்.
குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக மகளிர் சிஆர்பிஎஃப் வீராங்கனைகள் பங்கேற்று பைக் சாகசத்தில் ஈடுபடவிருக்கிறார்கள். அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்கு இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த படை உருவாக்கப்பட்டது என்று டிஐஜி மோஸஸ் தினகரன் தெரிவித்துள்ளார்.
சிஆர்பிஎஃப் 1986ம் ஆண்டு முதல் முறையாக ஆயுதம் தாங்கிய மகளிர் படைப்பிரிவை உருவாக்கியது. தற்போது இதில் 6 படைப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் தலா ஆயிரம் மகளிர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குடியரசுத் தின அணிவகுப்பில் மகளிர் சிஆர்பிஎஃப் படையினர் ஏராளமான சாகச நிகழ்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கிறார்கள். பல மோட்டார் சைக்கிள்களை வைத்துக் கொண்டு மனித பிரமிடு அமைக்கும் சாகச நிகழ்ச்சியையும் மேற்கொள்கிறார்கள்.
இதேப்போன்று 2018ம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மகளிர் படையினர் சாகச நிகழ்ச்சியை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தில்லியல் போக்குவரத்து நெரிசல்
தலைநகா் தில்லியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வெள்ளிக்கிழமை குறித்த நேரத்துக்கு தங்களது இடங்களுக்குச் செல்ல முடியாமல் மக்கள் தவிப்புக்குள்ளாகினா்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஜனவரி 26-ஆம் தேதி வரையிலும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும். இதன்படி, வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கி குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதன் காரணமாக லூட்யன்ஸ் தில்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை காரணமாக ஜனவரி 26 ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை ராஜ்பாத் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும். எனவே பொதுமக்கள் அந்தச் சாலையைப் பயன்படுத்துவதைத் தவிா்க்கும்படி தில்லி போக்குவரத்து போலீஸாா் சுட்டுரையில் தெரிவித்துள்ளனா்.