

லக்னௌ: எதிர்வரும் பக்ரீத் பண்டிகை தினத்தன்று ஆடு வெட்ட அனுமதி கேட்டு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு, இஸ்லாமிய அறிஞர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சன்னி இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்த மூத்த அறிஞர் மற்றும் ஐஷ்பாக் வழிபாட்டுத் தலத்தின் மூத்த இமாம் மவுலானா காலித் ரஷித் பிராங்கி மஹலி. இவர் எதிர்வரும் பக்ரீத் பண்டிகை தினத்தன்று ஆடு வெட்ட அனுமதி கேட்டு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு, கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
உயிர்த் தியாகம் என்பது பக்ரீத் பண்டிகையின் முக்கியமான அம்சமாகும், எனவே அதனைச் செயல்படுத்துவதற்கு ஆடுகளை பலிகொடுக்க ஏதுவாக, மாநிலம் முழுவதும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடங்களில் ஆட்டு இறைச்சிக் கூடங்களை / சந்தைகளைத் திறக்க மாநில அரசு அனுமதிக்க வேண்டும்.
அந்த இடங்களில் எல்லாம் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துதல், அங்கு வருவோருக்கு கைச்சுத்தத் திரவம் மற்றும் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்தல் உள்ளிட்ட நடைமுறைகள் தவறாமல் பின்பற்றப்படும்.
பக்ரீத் பண்டிகையை மனதினில் கொண்டு அரசு அனுமதியுடனான இறைச்சிக் கூடங்களுக்கு அனுப்புவதற்காகவே ஆண்டுமுழுவதும் கால்நடைகளை வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
அதேசமயம் இத்தகைய வியாபாரிகள் மாநிலம் முழுவதும் தங்களது கால்நடைகளை தங்கு தடையின்றி கொண்டு செல்வதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
இறுதியாக கரோனா நோய்ப் பாதிப்பு வீதத்தினைக் கட்டுப்படுத்த இயலும் என்றால், ஒவ்வொரு மசூதியிலும் அதன் கொள்ளளவில் பாதியளவிற்கு நபர்களுடன் பக்ரீத் தொழுகை நடப்பதற்கும் அனுமதியளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.