

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய களையெடுப்பில் பலியான அமர் துபேயின் தந்தை சஞ்சுவ் துபே இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது உயிரோடு வந்துள்ளார்.
பிக்ரு கிராமத்தில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் மரணம் அடைந்ததாகக் கூறப்பட்ட சஞ்சீவ் துபே தற்போது உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காவல்துறையினரால் இன்று சுட்டுக் கொலை செய்யப்பட்ட முக்கிய ரௌடி விகாஸ் துபேவின் நெருங்கியக் கூட்டாளியாக இருந்தவர் அமர் துபே. இவர் கடந்த புதன்கிழமை அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமர் துபே சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து குடும்பத்தாரிடம் தகவல் தெரிவிக்க வியாழக்கிழமை பிக்ரு கிராமத்துக்கு காவல்துறையினர் சென்றனர். அப்போதுதான், அமர் துபேவின் தந்தை சஞ்சீவ் துபே உயிரோடு இருக்கும் தகவல் காவல்துறைக்கக் கிடைத்தது. இத்தனை ஆண்டுகளும் சஞ்சீவ் துபே காவல்துறைக்குத் தெரியாமல் ஓரிடத்தில் தலைமறைவாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தனது மகன் இறந்துவிட்டதாகத் தெரிந்ததும், தலைமறைவாக இருந்த சஞ்சீவ் கிராமத்துக்கு வந்ததால், அவர் உயிரோடு இருப்பது தெரிய வந்தது. முதற்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கிய போது தனக்கு கால் முறிந்து போனதாகவும், ஆனால், விபத்தில் தான் இறந்துவிட்டதாகக் கூறுமாறு குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டு, தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகவும் சஞ்சீவ் கூறியுள்ளார்.
தன் மீது இருக்கும் கொலை முயற்சி உள்பட 12க்கும் மேற்பட்ட வழக்குகளை முடிக்கவே இவ்வாறு நாடகம் ஆடியதாகவும் பழைய ரௌடி சஞ்சீவ் கூறியுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.