

சில்சார்: கிழக்கு அஸ்ஸாமில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் 13 குரங்குகள்: செத்து மிதந்த சம்பவம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
கிழக்கு அஸ்ஸாமின் கச்சர் மாவட்டத்தில் உள்ள சில்சார் என்னும் பகுதியில், மாநில பொது சுகாதாரப் பொறியியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கதிரலி நீர் விநியோக மையத்திற்குச் சொந்தமான சிறிய நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் திங்கள் காலை 13 குரங்குகள்: செத்து மிதந்து கொண்டிருந்தன. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவத் துவங்கியதும், விரைந்து வந்த வனத்துறையினர், உடல்களை மீட்டு வனத்துறை ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய வனத்துறை அதிகாரி ருபெல் தாஸ், ‘குரங்குகளின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்தபோது அவற்றின் உடல்களில் விஷம் கலந்திருந்தது தெரிய வந்தது. தற்போது அடுத்த கட்ட பரிசோதனைக்காக கவுஹாத்தியில் உள்ள நோய்த் தடுப்பு ஆராய்ச்சி மையத்திற்கு அவை அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
அருகிலுள்ள மற்றொரு நீர் விநியோக மையத்திள் இருந்து வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுவதால், அங்குள்ள மக்களிடையே பதற்றம் நிலவுகிறது. ஆனால் குறிப்பிட்ட நீர்த்தேக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள நீரேற்றும் தொட்டியானது புழக்கத்தில் இல்லை என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று, மாநில பொது சுகாதாரப் பிரிவு பொறியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விஷமிகள் யாரோ தீய நோக்கத்துடன் நீர்த்தேக்கத்தில் விஷம் கலந்திருக்கலாம் என்று வன காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.