

மாதாந்திர பூஜைக்காக ஜூன் 14-ஆம் தேதி சபரிமலை கோயில் திறக்கப்படும் நிலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 5 ஆம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பரவல் இன்னும் குறையவில்லை.
இதையடுத்து, கரோனா பரவும் அச்சத்தால் ஜூன் 14 ஆம் தேதி திறக்கப்படும் சபரிமலை கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், சபரிமலை ஆராட்டு விழா ரத்து செய்யப்படுவதாகவும் அதே நேரத்தில் ஜூன் 14 முதல் ஜூன் 19 ஆம் தேதி வரை பூஜைகள் மட்டும் நடக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
முன்னதாக ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 22 முதல் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.