மும்பை: நாட்டில் முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டு 94 நாள்கள் ஆகிவிட்டது, ஆனாலும், மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று நாள்தோறும் அதிகரிக்கிறதே தவிர, குறைவதற்கான அறிகுறிகளே இல்லை.
நேற்று மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
நாட்டில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்று 3,493 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,01,141 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 127 பேர் உள்பட மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,717 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் மட்டும் 55,451 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 2,044 பேர் பலியாகியுள்ளனர்.
அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,718 பேர் உள்பட 47,793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது குறித்து அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருப்பதாவது, மகாராஷ்டிரத்தில் இன்னமும் கரோனா பாதிப்பு அதிகரிக்கும், இதுவரை உச்சத்தைத்தொடவில்லை என்கிறார்கள்.
சுமார் மூன்று மாத கால பொது முடக்கத்துக்குப் பிறகும் அங்கு நிலைமை சாதகமாக மாறவில்லை. தொற்றுப் பரவவும், பலி எண்ணிக்கையும் குறையவில்லை. ஆனால் அதற்கு மாறாக பாதிப்பு தொடர்ந்து ஒரே விகிதத்தில் உயர்ந்து வருகிறது. இது எப்போது உச்சத்தைத் தொட்டு, குறையத் தொடங்கும் என்று தெரியவில்லை என அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
21 - 30 வயதுடைய 19% பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவே 31 - 40 வயதுடையவர்கள் 20% ஆகவும், 41 - 50 வயதுடையவர்கள் 18% ஆகவும், 51 - 60 வயதுடையவர்கள் 17% ஆகவும் உள்ளது.