தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைக்கான கட்டண உச்ச வரம்பை 2,200 ஆக குறைத்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள ரூ. 4,500ஐ கட்டணமாக நிர்ணயித்தது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்). அதுவே, அரசு ஆய்வகங்களில் இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைக்காக ரூ. 2,200 உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்ததாவது:
"மருத்துவமனைகளில் மாதிரிகளை சேகரிக்க ரூ. 2,200 கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதுவே வீடுகளுக்கு வந்து மாதிரிகளை சேகரிக்க ரூ. 2,800 கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. முன்னதாக முறையே ரூ. 4,500 மற்றும் ரூ. 5,200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியர்கள் தனியார் ஆய்வகங்களிடம் பேசி, இந்த கட்டணத்தை மேலும் குறைக்கலாம். தனியார் ஆய்வகங்களில் புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலித்தால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மகாராஷ்டிரத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள 91 ஆய்வகங்கள் உள்ளன."