கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 152 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 397 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளம்:
கேரளத்தில் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று புதிதாக 152 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 98 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 46 பேர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,603 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,691 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரளத்தில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் 90 சதவிகிதத்தினர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று தெரிவித்தார்.
கர்நாடகம்:
கர்நாடகத்தில் புதிதாக 397 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 10,118 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 14 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 149 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,151 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 3,799 பேர் சிகிச்சையில் உள்ளனர். அங்கு 112 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.