இரண்டு மாத காலத்துக்கும் மேலாக வேலை இல்லாமல், உணவுக்குக் கூட காசில்லாமல் தவித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களான தம்பதி தங்களது இரண்டு மாதக் குழந்தையை விற்க முயன்றக் குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு மாத ஆண் குழந்தையை ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய முயன்றதாக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மதன் குமார் சிங் (32), சரிதா (30) தம்பதி ஹைதராபாத்தில் தங்கி வேலை செய்து வந்தார்கள். ஊரடங்கால் வேலை இல்லாமல், சேஷு என்ற பெண்ணிடம் ஏதேனும் உதவி கிடைக்குமா என்று கேட்டுள்ளனர்.
அப்போதுதான், அப்பெண், இந்த தம்பதிக்கு ஏற்கனவே 7 வயதில் மகன் இருப்பதால், தற்போது பிறந்த 2 மாதக் குழந்தையை விலைக்கு விற்குமாறு கூறியுள்ளார். அதற்காக குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனை மற்கொள்ள சேஷு குழந்தையோடு மருத்துவமனைக்கு வந்த போது இந்த சம்பவம் காவல்துறைக்கு தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும், காவல்துறையினர் விரைந்து வந்து குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
பெற்றோர் மற்றும் தரகராக செயல்பட்ட சேஷுவையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊரடங்கால் வேலையிழந்து, உண்ண உணவும் இல்லாத நிலையில் தங்கள் குழந்தையையே விற்க வேண்டிய நிலைக்கு புலம்பெயர் தொழிலாளர் தம்பதி தள்ளப்பட்டுள்ளனர்.