ஜூன் 8-ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 4-ஆம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் நாளையுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் பற்றிய அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, பொது மக்கள் வழிபாட்டுக்காக ஜூன் 8-ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜூன் 8-ஆம் தேதி முதல் உணவகங்கள், விடுதிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவையும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு மேற்குறிப்பிட்ட இடங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சகம் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.