புது தில்லி: கரோனாவிலிருந்து மீண்டு, தன்னைப் போல பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காக்க பிளாஸ்மா தானமளித்து பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார் தில்லி காவலர் கிரிஷண் குமார்(42).
கரோனாவிலிருந்து மீண்டு, பிளாஸ்மா தானமளித்து சுமார் 350 கரோனா நோயாளிகளை காப்பாற்றியிருக்கிறார்கள் தில்லி காவலர்கள். அதில் ஒருவர்தான் கிரிஷண் குமார்.
தில்லியின் தென்மேற்கு மாவட்டமான கப்ஷேரா காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் கிரிஷண் குமார், தனக்கு கரோனா பாதித்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அனுபவம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சுமார் ஒரு மாத காலம் செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வந்தேன். நான் பிழைப்பேன் என்று யாருமே நினைக்கவில்லை. ஆனால் கடவுளின் கருணையால் பிழைத்துவிட்டேன்.
நான் குணமடைந்த பிறகுதான், கரோனாவால் பாதிக்கப்படுவோரைக் காக்க அவரது குடும்பத்தினர் எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறார்கள் என்பதை உணர்ந்தேன். அதனால்தான் பிளாஸ்மா தானமளிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஒருவர் அதிகபட்சமாக 5 முறை பிளாஸ்மா தானமளிக்கலாம். ஒரு முறை பிளாஸ்மா தானமளிக்கும் போது அதனை மூன்று பேருக்கு பயன்படுத்தி, ஒருவர் மூலமாக 15 பேரை காக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மே மாதம் குமாருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனது மனைவியும் குணமடைந்த பிறகு, அவரையும் பிளாஸ்மா தானமளிக்க ஊக்கப்படுத்தினேன். காவல்துறையைச் சேர்ந்த யாருக்கு பிளாஸ்மா தேவைப்பட்டாலும் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு குமார் தெரிவித்திருந்தார்.
தில்லி காவல்துறையைச் சேர்ந்த 81,346 காவலர்களில் சுமார் 7 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 26 பேர் பலியாகினர்.
நவம்பர் 23-ம் தேதி வரை 323 தில்லி காவலர்கள் தங்களது பிளாஸ்மாவை தானமளித்துள்ளனர், இதில் 82 பேர் தங்களது சக காவலர்களுக்காகவும், 107 பேர் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுக்காவும், 134 பேர் யாரென்றே தெரியாத பொதுமக்களுக்காவும் பிளாஸ்மா தானமளித்தனர்.