அரசால் கையகப்படுத்தப்பட்ட தனது விவசாய நிலத்தை மீட்க 15 ஆண்டுகளாக போராடிய விவசாயி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டு பலியாகியுள்ளார்.
சமீபத்தில் இயற்றப்பட்ட விவசாய சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாய அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு மத்தியில், மகாராஷ்டிர மாநிலத்தில் சோகமான சம்பவம் நடந்தேறியுள்ளது.
மகாராஷ்டிரத்தின் பாலி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூன் சலுங்கே. விவசாயியான இவரது நிலத்தை 1962ஆம் ஆண்டு மாநில நீர்பாசனத்துறை கையகப்படுத்தியது. அதிகப்படியான நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொண்டதாக சந்தேகித்த அவர் அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரியும், தனது நிலத்தை மறுஅளவீடு செய்யுமாறும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயி அர்ஜூன் கடந்த 15 ஆண்டுகளாக இதற்காகப் போராடி வருகிறார். எனினும் அவரது கோரிக்கை மனு மீது அலட்சியம் காட்டி வந்த அதிகாரிகள் அதனைக் கிடப்பில் போட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பீட் மாவட்டத்தில் உள்ள பார்ஷி நீர்பாசனத்துறை அலுவலத்தில் தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டார். 90 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மூவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக அர்ஜூனின் மகன் சலன்கே காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.