கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் புணே, ஆமதாபாத், ஹைதராபாத்தில் உள்ள நிறுவனங்களில், பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆய்வு மேற்கொள்கிறார்.
நாளை பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு, கரோனா தடுப்பு மருந்து தயாரிப்புப் பணிகளை நேரடியாக பார்வையிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆமதாபாத்தில் உள்ள ஸைடஸ் பையோடெக் பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக், புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்வார் என்று பிரதமரின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனாவக்கு எதிரான போரில் இந்தியா மிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை அடைந்துள்ளது, இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நேரடியாக பயணம் மேற்கொண்டு, அங்குள்ள விஞ்ஞானிகளுடன் கலந்தாலோசனை நடத்தி, கரோனா தடுப்பூசி தயாரிப்பு, அதிலிருக்கும் சாவல்கள் மற்றும் சிக்கலுக்கான தீர்வுகளை நேரடியாகக் கேட்டறிய உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.