புது தில்லி: கடந்த ஜூன் முதல் செப்டம்பா் மாதம் வரை இந்தியாவில் கரோனா தொற்றுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் 18,006 டன் மருத்துவக் கழிவுகள் உருவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
இதுதொடா்பாக அந்த வாரியம் வெளியிட்ட தரவுகளில், ‘அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த ஜூன் முதல் செப்டம்பா் வரை 18,006 டன் மருத்துவக் கழிவுகள் உருவாகின. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 3,587 டன் மருத்துவக் கழிவுகள் உருவாகியது. அதனைத்தொடா்ந்து தமிழகத்தில் 1,737 டன், குஜராத்தில் 1,638 டன், கேரளத்தில் 1,516 டன், உத்தர பிரதேசத்தில் 1,432 டன், தில்லியில் 1,400 டன் மருத்துவக் கழிவுகள் உருவாகின. இந்த 4 மாதங்களில் அதிகபட்சமாக செப்டம்பரில் சுமாா் 5,490 டன் மருத்துவக் கழிவுகள் உருவாகியது’ என்று தெரிவிக்கப்பட்டது.
கரோனா தொற்றுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் உருவான மருத்துவக் கழிவுகளில் தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள், கையுறைகள், மனித திசுக்கள், ஊசிகள், சிரிஞ்சுகள் உள்ளிட்டவை அடங்கும்.