

ஆக்ரா: ஆக்ரா பல்கலைக் கழகத்தின் காந்தாரி வளாகத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற எம்பிபிஎஸ் இறுதியாண்டுத் தேர்வில் எந்திரன் பட பாணியில் காப்பியடித்த 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வின் போது, சில தேர்வர்கள் தங்களது நெஞ்சுப் பகுதியில் அவ்வப்போது கைவைத்து அழுத்திக் கொண்டிருந்ததை தேர்வுக் கண்காணிப்பாளர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக அங்கு என்ன இருக்கிறது என்று காண்பிக்குமாறு கண்காணிப்பாளர்கள் கேட்டபோது, அது தங்களது மதச் சின்னம் என்றும், அதை யாருக்கும் காட்டக் கூடாது என்றும் தேர்வர்கள் கூறினார்கள்.
உடனடியாக அவர்களை தனியாக அழைத்துச் சென்று கண்காணிப்பாளர்கள் விசாரித்த போது, எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராயைப் போல, சிம்கார்டுடன், ப்ளூடூத் இணைக்கப்பட்ட இயர்ஃபோன்களைப் பயன்படுத்தி மாணவர்கள் காப்பி அடித்ததும், வெளியில் இருந்து யாரோ அவர்களுக்கு வினாக்களுக்கான விடைகளை சொல்லியதும் தெரிய வந்தது.
உடனடியாக பல்கலைக்கழகம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரினை அடுத்து காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக ஆணையம் இறுதி அறிக்கையை சமர்ப்பித்ததும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆக்ரா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் அஷோக் மிட்டல் கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ் இறுதித் தேர்வின் போது சில மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக பல்கலைக்கழகத்துக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்ததாகவும், அதை அடிப்படையாக வைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.