தில்லியில் 58 ஆண்டுகளில் இல்லாத அளவு பதிவான அக்டோபர் மாத குளிர்
தில்லியில் நடப்பாண்டு அக்டோபர் மாதம், 58 ஆண்டுகளில் இல்லாத அளவு குளிரானது பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தில்லியில் தற்போது குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வருவதற்கே சிரமப்பட்டு வருகின்றனர்.
நடப்பாண்டு அக்டோபர் மாதம் குளிரின் அளவானது 17.2 செல்சியஸுக்கும் கீழே சென்றது. இது கடந்த 1962ஆம் ஆண்டில் இருந்து பதிவான அளவுகளைக் காட்டிலும் குறைவானதாகும்.
பொதுவாக தில்லியில் அக்டோபர் மாதம் குளிரின் சராசரி அளவானது 19.1 டிகிரி அளவில் பதிவாவது வழக்கம். எனினும் நடப்பாண்டு சராசரி அளவைக் காட்டிலும் அதிகமான அளவு குளிர் நிலவியுள்ளது. இந்தாண்டு குறைந்தபட்ச குளிர் அளவாக 15 முதல் 16 செல்சியஸ் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை 12.5 செல்சியஸ் அளவு குளிர் பதிவாகி இருந்தது.